search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலித் தொழிலாளி பலி"

    • வேலைக்குச் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒலக்காசி ஊராட்சி சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 50).மரம் ஏறும் தொழிலாளி.

    இன்று காலையில் வழக்கம் போல் வேலைக்குச் செல்ல சித்தாத்தூர் கிராமத்தில் இருந்து மண் பாதை வழியாக ஐதர்புரம் செல்ல சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    வேப்பூர் கிராமம் அருகே செல்லும்போது சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் சைக்கிள் இறங்கி சென்றுள்ளது. அப்போது அந்த தண்ணீரில் அதிகாலை நேரத்தில் அறுந்து விழுந்த மின் கம்பி இருந்துள்ளது. அதனால் மின்சாரம் பாய்ந்த நிலையில் இருந்த தண்ணீரில் சைக்கிள் இறங்கியதும் உடனடியாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து ஜீவா இறந்தார். அந்த வழியாக வந்தவர்கள் ஜீவா துடிதுடித்து இருப்பதை கண்டு உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர்.

    சம்பவ இடத்திற்கு குடியாத்தம் தாலுகா போலீசார் விரைந்து வந்து ஜீவாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காலை நேரத்தில் அந்த மண் பாதை வழியாக வாகனங்களும் ஏராளமான கிராம மக்களும் வேலைக்குச் செல்ல பயன்படுத்தி வந்தனர்.

    தேங்கிய தண்ணீரில் மின்கம்பி இருந்தது தெரியாததால் ஜீவா பரிதாபமாக இறந்தார். அந்த மின் கம்பி அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீதோ கூட்டமாக செல்லும் கிராம மக்கள் மீதோ விழுந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    இறந்து போன ஜீவாவிற்கு கவிதா என்ற மனைவியும் ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×